June 08, 2015

அவன் –
விடைகளற்ற வினாக்களை
காவல் காத்துக் கொண்டிருக்கிறான்.
அது –
அவனுக்கிடப்பட்ட
கட்டளையென்கிறார்கள் சிலர்.
கடமையென்கிறார்கள் சிலர்.
பொறுப்பென்கிறார்கள் சிலர்.

என்றாலும் –
யாரேனும் விடைசொல்லி
அவனை
கட்டளையிலிருந்தோ
கடமையிலிருந்தோ
பொறுப்பிலிருந்தோ
விடுவிக்கலாம்.

விடையின் சூட்சுமத்தை மட்டும்
என்னிடம் கேட்காதீர்கள்.
அதை –
படைத்தவனிடமே

கேட்டுக் கொள்ளுங்கள்.
நல்ல
கனவு வருமென
நினைத்தால்

கவிதை வந்து தொலைக்கிறது.
சென்னையிலிருந்து
நெல்லை சென்றவன்
தஞ்சையிலிருந்து
திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
நெல்லைக்கும் தஞ்சைக்குமிடையே
கனவுப் பாலம்
போட்டது யாரென்றுதான்

புரியவேயில்லை.